டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் ஓங்கோல் அருகே இரண்டு பெண்களிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளைக் கும்பலால் பறித்துச் சென்றது.
டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயிலில் பயணித்த இரண்டு பெண்களிடம் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி உள்ளனர். வழியில் ஓங்கோல் சிக்னல் அருகே ரயில் நின்ற போது, எஸ் 3 பெட்டிக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், அதில் பயணித்த தஞ்சையைச் சேர்ந்த மைதிலி என்ற பெண்ணிடம், 7 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றது.
எஸ் 4 பெட்டியில் பயணித்த சீதா ரம்யா ஸ்ரீ என்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை ஜன்னலுக்கு வெளியே இருந்து பறிக்க முயன்ற போது, அந்தப் பெண் இறுகப் பற்றிக் கொண்டதால் அருகில் இருந்த பையை எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பினர். அந்தப் பையில் 25 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார் ஓங்கோல் ரயில்வே போலீசாருக்கு வழக்கை மாற்றி உள்ளனர்.
இதேபோல கடந்த வாரம் சார்மினார் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் தமிழக பயணிகளிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஓங்கோல் சிக்னல் அருகே 10 கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.