திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை அங்கீகரித்து அளிக்கப்பட்ட மனுவில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில், தலைமை தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் வில்ஃபர்ட் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அவரிடம் திமுக வேட்பாளர் சரவணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, ஏ.கே.போஸின் வேட்புமனுவை அங்கீகரித்து ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட படிவத்தை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொண்டீர்கள் என முதன்மைச் செயலாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ஜெயலிலதா உடல் நலக்குறைவு காரணமாக கையெழுத்திட முடியாத நிலையில் இருந்ததால், படிவத்தில் அவரிடம் கைரேகை வாங்கப்பட்டிருப்பதாக கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம் அளித்ததாக தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் பதிலளித்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் ஜெயலலிதா கைரேகை இட்ட படிவத்தை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் பதிலளித்தார். இது தொடர்பான மேலும் பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளர் வில்ஃபர்ட் தெரியாது என்றே பதிலளித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தேதியில் படிவத்தில் இருப்பது ஜெயலலிதாவின் கைரேகைதான் என சான்றளித்த சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.