மேற்கு வங்கம் மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
கரீம்பூரில் இருந்து மால்டாவுக்கு 55 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று, கடும்பனி மூட்டம் காரணமாக, நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தது. முர்சிதாபாத்தில் உள்ள பகிரதி ஆற்றுப் பாலத்தில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர், உள்ளூர் பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது வரை 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சுவேந்து ஆதிகாரி விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இதனிடையே பேருந்து கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.