முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று 16 மாதங்களுக்கு பிறகு ஆய்வு செய்த மூவர் குழு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை மராமத்து மற்றும் கண்காணிப்புக்காக உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் புதிய தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குன்சன்ராஜ் நியமிக்கப்பட்டார். கேரள பிரதிநிதியாக அம்மாநிலத்தின் நீர்வள ஆதார அமைப்பின் செயலாளர் டிங்கு பிஜ்வாலும், தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகரனும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 16 மாதங்களுக்குப் பின்னர், முல்லைப் பெரியார் அணையை மூவர் குழு ஆய்வு செய்தது. பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர் இருப்பு, வரத்து, கசிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மூவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அக்குழுவினர், வள்ளக்கடவு வழியாக பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிப்பது, பேபி அணைக்கு செல்லும் வழியைச் சீரமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேரள அரசுடன் பேசப்பட்டு வருவதாகவும், முல்லை பெரியாறு பலமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.