முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வந்தன. இதன் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் கொழும்புவில் நேற்று நடைபெற்ற போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததால், முதலில் களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. சபீர் ரஹ்மான் அபாரமாக விளையாடி 77 ரன்களைக் குவித்தார். இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
20 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த லோகேஷ் 24 ரன்களும், மணீஷ் பாண்டே 28 ரன்களும் சேர்த்தனர்.
கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் சிக்ஸர், பவுண்டரி என விளாசி வங்கதேச வீரர்களைத் திணறடித்தார்.
கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான மற்றும் சாதுர்யமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு இந்த வெற்றி சாதகமாயிற்று. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்திய அணிக்கு நிடஹாஸ் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.