திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதியில் சீரமைப்புப் பணிகள் 40 சதவீதம் கூட முடிவடையவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 8 தூண்களும் 9 மதகுகளும் இடிந்து விழுந்ததை அடுத்து, மணல் மூட்டைகளால் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 90 லட்சம் ரூபாய் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின்னர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள கரம்பா ஏரிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், வறண்டு கிடக்கும் அந்த பகுதிகளை பார்வையிட்டார். கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து கட்டளை மேட்டுவாய்க்கால் மற்றும் உய்யங்கொண்டான் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர், செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 81 ஏரிகளுக்கு வரும்.
இதனால் 37 கிராம விவசாயிகள் பயனடைந்த நிலையில், போதிய மழையில்லாததால், கடந்த 8 ஆண்டுகளாக ஏரிகள் அனைத்தும் வறண்டே கிடக்கின்றன. தற்போது மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும், மாயனூர் கதவணைப் பகுதியில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையிலும், செங்கிப்பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, வாய்க்கால்களை தூர்வாரி, ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, செங்கிப்பட்டி விவசாயிகள், மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர்.