மத்திய பாஜக அரசு இந்தியாவை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்ல முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், சி.கே.மதிவாணன் எழுதிய, மகத்தான ருஷ்யப் புரட்சியின் மலரும் நினைவுகள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, அதன் முதல் பிரதியை, ஏ.ஐ.பி.எஸ்.என்.எல் மாவட்ட உதவி செயலாளர் காமராஜ் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் உரையாற்றிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், மத்திய பாஜக அரசு இந்தியாவை இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச்செல்ல முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தமிழக ஆளுநரின் ஆய்வு நடவடிக்கை மரபை மீறிய செயல் என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.