மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பகுதி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்பாராத விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து அனைத்து துறைகளின் முயற்சியால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப் பட்டதாக தெரிவித்தார். மேலும் தீ விபத்து நேர்ந்த பகுதி குளிர்ச்சி அடையும் விதமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தொல்லியல் துறை நிபுணர்களின் ஆய்வு அறிக்கையின் படி தீ விபத்து நடந்த பகுதி பழமை மாறாமல் புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். ஏழை எளிய மக்களின் கரங்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் முறையாக சென்று சேரும் என்று கூறிய அவர், நலத்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று விளக்கமளித்தார்.