மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை யாகப்பா நகரில் குறிஞ்சி குமரன் என்பவர் வசித்து வந்தார். அப்பகுதியில் நர்சரி பள்ளி நடத்தி வரும் இவர், குலுக்கல் சீட்டும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை அவர் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது 5 பேர் ஏற்கனவே உயிரிழந்த்து தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், தீபாவளி சீட்டு நடத்தியதால் அவர்களுக்கு சிறிது கடன் தொல்லை இருந்ததாகவும், அதனால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். இருப்பினும், சரியான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.