தமிழக அரசுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
13-வது புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ள போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் 30 தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் எப்போது தரப்படும்? என்பதை தெளிவாக கூற வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று கூறியுள்ள போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், இந்த வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 43 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளனர்.