மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 19,799 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தீபக் சவந்த் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் குறைந்த எடை, குறை பிரசவம், பிறவி சுவாசக் கோளாறு, தொற்றுநோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களால் கடந்த 2017 ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுமார் 19,799 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தீபக் சவந்த் தெரிவித்துள்ளார். இதனை சமீபத்தில் நடைபெற்ற சட்டசபையின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்துள்ள குழந்தைகளின் சரியான வயதை அவர் குறிப்பிடவில்லை.
மேலும், இதுகுறித்து பேசிய அமைச்சர் தீபர் சவந்த், குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க, தக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மாநிலத்தின் பெண்கள் நலம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் வாயிலாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பெண்கள் குழந்தை பெற்ற உடன் அடுத்த 42 நாள்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும், குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஒரு வருடம் வரையிலும் இலவச சிகிச்சை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பொது சுகாதாரத் துறை பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட்டு, புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடல் பருமனைப் பரிசோதிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தடுப்பூசிகள் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள குழந்தைகளின் பலி எண்ணிக்கை உண்மையில்லை என்றும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துகுறைபாட்டால் இறந்திருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞாட்டியுள்ளனர்.