ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா 2 தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் சச்சின் ரதியும், தீபக் பூனியாயும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
டெல்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கி நேற்றுவரை நடைபெற்றது. தொடரின் கடைசி நாளான நேற்று, இந்தியா சார்பில் 4 வீரர்கள் பதக்க சுற்றுக்கு முன்னேறினர். இதில் 74 கிலோ ஃபிரி ஸ்டைல் எடை பிரிவின் இறுதிப் போட்டியில் மங்கோலிய வீரர் பேட் எர்டெனேவை, இந்திய வீரர் சச்சின் ரதி எதிர்கொண்டு தங்கம் வென்றார்.
அதேபோல் 86 கிலோ எடைப்பிரிவில் துருக்மேனிஸ்தான் வீரரை வீழ்த்திய தீபக் பூனியாவும் தங்கம் வென்றார். இதில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 61 கிலோ எடைப்பிரில் சூரஜ் ராஜ்குமாரும், 125 கிலோ எடைப்பிரிவில் மோகித்-தும் பதக்கம் வென்றனர். ஒட்டுமொத்தமாக 173 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்தது. ஈரான் முதலிடத்தையும், உஸ்பெகிஸ்தான் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. தங்கம் வென்ற சச்சின் ரதிக்கும், தீபக் புனியாவுக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.