பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்பவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகரில், தனது காதலை ஏற்க மறுத்த இந்துஜா என்ற பெண்ணை, ஆகாஷ் என்பவர் குடும்பத்துடன் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்துஜா உயிரிழந்தார். எரிந்துகொண்டிருந்த பெண்ணை காப்பற்ற சென்ற தாய் ரேணுகாவும், தங்கை நிவேதிதாவும் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆதம்பாக்கம் காவல்துறையினர் கொலையாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த இந்துஜாவின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்பவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் சென்னை போன்ற பெருநகரங்களில் காவல்துறையினரை எளிதாக அனுக வாய்புள்ள நிலையிலும், இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.