ராய்ப்புர் நகரைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு மாணவி ஒருவர் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். புதிய பார்முலா மூலம் புற்றுநோயை முற்றிலுமாக குணமாக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார். மம்தா திரிபாதி என்ற அந்த ஆய்வு மாணவி இங்குள்ள பண்டிதர் ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுக்குப் பின் புற்றுநோய் செல்களை 80 சதவீதம் வரை கொன்று நோயாளியை குணப்படுத்தக் கூடிய பார்முலாவை தாம் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எலிகளுக்கு இதனை பரிசோதித்து மனிதர்களுக்குப் பயன்படுத்த பரிந்துரை செய்ய இருப்பதாகவும் அவர் கூறுகிறார். உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 8 கோடியே 80 லட்சம் பேர் புற்று நோயால் உயிரிழக்கின்றனர்.