அடுத்த பிரதமர் யார் என்பதை எங்கள் கூட்டணி தீர்மானிக்கும்”: டிடிவி தினகரன் உறுதி

அடுத்த பிரதமர் யார் என்பதை தங்களின் கூட்டணி தீர்மானிக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஊழல் நிறைந்த ஆட்சி. இந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே விரைவில் வரும் என்றார். மேலும் பேசிய அவர், நிச்சயமாக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் கல்வி தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்றார்.

மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் யார் பிரதமர் என்பதை தமிழக எம்.பி.க்கள் தீர்மானிக்க போகிறார்கள். தமிழகத்திற்கு எது தேவையில்லையோ மக்கள் ஏற்கவில்லையோ அதை சரி செய்து நல்ல அரசாங்கம் அமைக்க தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். எங்கள் கூட்டணி தான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நல்ல தீர்ப்பாக இருக்கும். இந்த வழக்கில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும். நீதிபதிகளுக்கு யார் மிரட்டல் செய்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது என்றார். பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை பற்றி என்ன விமர்சனம் செய்தாலும், மத்திய அரசுக்கு சேவகர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள் பதில் கூற மாட்டார்கள் என தினகரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *