ஈரோட்டில் ரூ.50000 பணத்தை போலீசிடம் ஒப்படைத்த 7 வயது சிறுவன் முகமது யாசின் என்ன படிக்க நினைத்தாலும் என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் பாட்ஷா – அப்ரோஸ்பேகம் தம்பதியினர். இவர்களது இளைய மகன் முகமது யாசின். அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளிக்கு செல்லும் வழியில் 50,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த சிறுவன் முகமது யாசின் அதனை பத்திரமாக தனது ஆசிரியரிடம் ஒப்படைத்தார். பின்னர் ஆசிரியர் சிறுவனை அழைத்துக் கொண்டு அதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் ஒப்படைத்தார். சிறுவனின் நேர்மையை பாராட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சிறுவன் தனக்கு நடிகர் ரஜினியை நேரில் பார்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதன்படி சிறுவன் முகமது யாசின் தனது குடும்பத்தினருடன் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். அப்போது சிறுவன் முகமது யாசினுக்கு தங்கச் செயின் அளித்து ரஜினி பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சிறுவன் முகமது யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன். அவர் என்ன படிக்க நினைத்தாலும் அதனையே படிக்க வைப்பேன் என்றார்.