பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அயோத்தி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டி அயோத்தி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பகுதிக்குள் யாரும் நுழையாதபடி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கு உதவியாக 10 நிறுவனங்களை சேர்ந்த மத்திய துணை ராணுவ படையினர், 2 நிறுவனங்களை சேர்ந்த அதிரடி விரைவுப் படையினர், 400 காவலர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணிகளில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரோந்துப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. 24 மணிநேர பாதுகாப்பு வழங்கும் வகையில் மதுரையில் 3 ஆயிரம் காவலர்களும், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முழுவதும் 10 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.