ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி டிசம்பர் 4 உடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று வேட்புமனுக்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் சரி பார்க்கப்பட்டது. இதில் 72 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 72 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு பெட்டியில் 16 வேட்பாளரின் சின்னத்தை மட்டுமே பொருத்த முடியும் என்பதாலும் அதிகபட்சமாக ஒரு வாக்குச் சாவடிக்கு 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரை மட்டுமே இணைக்க முடியும் என்பதாலும் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுமா அல்லது வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் டிசம்பர் 7 தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் உள்ளதையடுத்து அதற்குப் பிறகே தேர்தல் ஆணையம் இது குறித்து முடிவு செய்யும் என்று தெரிய வருகிறது.