மக்களவை வாக்கெடுப்பில் பாஜக அரசுக்குஆதரவாக அதிமுக வாக்களித்துள்ளது. இது இரு கட்சிகளுக்கும் இடையான பரஸ்பரஉறவை வெளிக்காட்டுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது அதிமுக உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ள ஸ்டாலின், அதிமுக அளித்துள்ள ஆதரவு நீட் தோல்வி, 15வது நிதிக்கமிஷன், ஜி.எஸ்.டி, இந்தி திணிப்பு, மதவாத அரசியல் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியிலும் இரு கட்சிகளுக்கும் இடையேயான நல்லுறவை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் வருமான வரிச் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பம் தங்களது குறிக்கோளில் வெற்றியடைந்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.