பாசனத்திற்காக நாளை திறக்கப்படுகிறது மேட்டூர் அணை.. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து நாளை பாசனத்துக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறக்க உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணைக்கு நொடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் 103அடியைத் தாண்டியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து நாளை பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று மேட்டூர் அணையைப் பார்வையிட்டார். \

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களையும் ஆட்சியர் பார்வையிட்டார். அவருடன் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் அணையைப் பார்வையிட்டனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ரோகிணி, நாளை பத்தேகால் மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும், இதனால் காவிரிக் கரையோரப் பகுதி மக்கள் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் எனத் தண்டோரோ மூலம்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிக அளவுத் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் யாரும் ஆற்று வெள்ளத்தின் முன் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்றும் ஆட்சியர் ரோகிணி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *