காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் கணவர், மாமியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சித்தோடு காந்தி நகரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல பிரியா என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று கோகுல பிரியா விஷம் குடித்து விட்டதாகவும், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாகவும் மகேஷின் வீட்டில் இருந்து பெண்ணின் வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் வருவதற்குள் கோகுல பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கோகுல பிரியாவின் உடலில் காயங்கள் இருந்ததால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொறுப்பு கோட்டாட்சியர் நர்மதா தேவி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

சித்தோடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோகுல பிரியாவின் கணவர் மகேஷ், மாமியார் தமிழ்ச்செல்வி, மகேஷின் அண்ணி ஹேமா ஆகிய மூவரும் வரதட்சணை கேட்டு கோகுல பிரியாவை கொடுமைப்படுத்தியதும், சாலையில் வைத்து அடித்து அவமானப்படுத்தியதும் தெரிய வந்தது. இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வரதட்சணைக் கொடுமை தாங்காமல் பெண் தற்கொலை செய்து கொண்டது மற்றும் தந்தை சிறையில் அடைக்கப்பட்டதால் பால்குடி மறவா 8 மாதக் குழந்தை நிர்கதியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *