பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்க தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஷெனாய் நகர் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கனகராஜ், மாணவிகளை அடித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து கனகராஜ் பணியிட மாற்றம், துறைரீதியான விசாரணை போன்ற நடவடிக்கைக்கு ஆளானார். இதனை எதிர்த்து கனகராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று கூறி, ஊதிய உயர்வை நிறுத்தும் உத்தரவை ரத்து செய்து, 8 வாரங்களுக்குள் பண பலன்களை வழங்க உத்தரவிட்டார். மேலும், தற்போதைய மாணவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். மாணவர்கள் எந்த மாதிரியான உளவியல் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என ஆய்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டார். உத்தரவை அமல்படுத்தியது குறித்து வரும் ஏப்ரல் 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி ஆணையிட்டார்.