பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும்… மாணவர்களின் போராட்டத்தையடுத்து தமிழக அரசு அறிவிப்பு;

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனையடுத்து கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும், 22 லட்சத்து, 66 ஆயிரத்து, 483 பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலை கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு ஐ.டி.ஐ-களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும், 3 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் கூடிய பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சலுகை, பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பயண அட்டைகள் வழங்குவதற்கு ஆகும் செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு, நடப்பு நிதியாண்டில், சுமார் 541 கோடி ரூபாயை, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு மானியமாக வழங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *