பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பேருந்துகளின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கண்டன முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டத்தை திசைதிருப்பி அவர்கள் மீது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இன்று சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.