நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நிலுவையில் இருக்கும் 25 மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் வங்கி மோசடிகள், பெண்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியினருக்கு இணக்கமான வேட்பாளரை நிறுத்த பாஜக ஆலோசித்து வருகிறது.
குழந்தைக் கடத்தல் வதந்திகளால் 30க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்டதையும், அது குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்துள்ளது . எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதனை சந்திக்க அரசு தயார் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்தார்.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுதிய கடிதத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, முத்தலாக் தடை சட்டம், நிக்கா ஹலாலா எனப்படும் பலதார மணத்தைத் தடுக்கும் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் ஒன்றாக நிறைவேற்ற ஒத்துழைப்பு தரும்படி கோரியுள்ளார்.