சொத்து வரியில் மாற்றம்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சொத்து வரியை மாற்றியமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் நேரில் ஆஜராயிருந்தனர்.

அப்போது நீதிபதிகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டிய சொத்துவரி நான்கு முறை மாற்றியமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் நடவடிக்கை ஏன் எடுக்கப்படுவதில்லை என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் சென்னை மாநகராட்சி சொத்துவரியை மாற்றியமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அடுத்த விசாரணையின்போதும் ஆஜராக வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *