மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்றுடன் ஒராண்டு நிறைவடைகிறது. இந்நாளை, தேசிய பொருளாதார பேரிடர் நாளாக அறிவித்து, சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன கூட்டம் நடைபெறவுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பழைய 500 – 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தாலும், வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள், வர்த்தகர்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஒராண்டு ஆகும் நிலையில், அன்றைய தினத்தை கறுப்பு தினமாக கடைபிடிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளான இன்று, தேசிய பொருளாதார பேரிடர் நாளாக கடைபிடித்து, சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கண்டன கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கண்டன கூட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். இதில், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கண்டன உரை ஆற்றவுள்ளனர்.
இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.