இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரும் விவகாரம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுகிறது. அப்போது, ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் தரப்பிடம் இதற்கு முன்னர் 5 கட்டங்களாக தேர்தல் ஆணையம் விசாரணையை நடத்தியது. இதில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு போலியான ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாக தினகரன் தரப்பும், விசாரணையை இழுத்தடிக்க தினகரன் தரப்பு முயற்சிப்பதாக கூறி எதிர்த்தரப்பும் வாதங்களை எடுத்துவைத்தன. இரட்டை இலை விவகாரம் தொடர்பான 6ஆவது கட்டமாக விசாரணை தேர்தல் ஆணையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விசாரணையின் போது டிடிவி தினகரன் தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன. தினகரன் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, அடுத்த கட்ட விசாரணையை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி, இன்று 7-வது கட்டமாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெறுகிறது. இதில், டிடிவி தினகரன் தரப்பு வாதங்கள் நிறைவடைந்து விட்டதால், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.