பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நவம்பர் எட்டாம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.
பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்த மத்திய அரசு, அவற்றை வங்கிகளில் செலுத்தி, வேறு மதிப்புடைய பணங்களை பெற கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. சிலர் வரிசையில் நின்ற போது நெரிசல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டை எட்டும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 7 எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண மதிப்பிழப்பு நடவடிகை எடுக்கப்பட்ட நவம்பர் 8ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிப்பது என்றும், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாநிலக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.