நெல்லையில் தேவர் பேரவை அமைப்பின் தலைவர் முத்தையாவின் கார் தாக்கப்பட்ட வழக்கில், நடிகர் கருணாசை தேடி அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில், அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவின்போது பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர். அப்போது, அங்கு மரியாதை செலுத்த ஒரே நேரத்தில் வந்த முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் கருணாஸ் உள்ளிட்டோர், தமிழ்நாடு தேவர் பேரவைத் தலைவர் முத்தையாவின் காரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, நெல்லை புளியங்குடி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் கருணாஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாசை கைது செய்ய நெல்லை புளியங்குடி காவல் நிலைய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக நெல்லை போலீசார் சுமார் 50 பேர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இன்று அதிகாலை கருணாஸ் வீட்டிற்கு வந்தனர்.
கருணாஸ் வீட்டை சுற்றி போலீசார் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டிற்குள் சென்று கருணாசை கைது செய்ய போலீசார் சிலர் சென்றனர். ஆனால் கருணாஸ் வீட்டில் இல்லை என்று அவரது வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து விடியற்காலை வரை கருணாஸ் வீட்டிலேயே காத்திருந்த போலீசார் பின்னர் வடபழனி காவல்நிலையத்திற்கு சென்று அங்கு முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே, சாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு, ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிரான போராட்டத்தின் போது ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் தினசரி கருணாஸ் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. ஆனால் இன்று காலை நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட கருணாஸ் வரவில்லை.
இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கருணாஸ் வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.