நடிகர் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை வரி பிடிப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
வடபழனி குமரன் காலனியில் உள்ள நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலின் பட தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’-அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 4 அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கூறி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் முதலில் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவினர் கூறப்பட்டது. அதிகாரிகள் நால்வரும் 3 மணிக்கு தொடங்கிய சோதனையை மாலை 6.30 மணிக்கு முடித்துவிட்டு வெளியேறினர். விஷால் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது ஜிஎஸ்டி புலனாய்வு அமைப்பினர் இல்லை என அதிகாரிகள் மறுத்த நிலையில் வருமான வரித்துறை வரிப்பிடிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது தெரிய வந்துள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தயாரிப்பு நிறுவனம் மூலம் கிடைத்த 51 லட்சம் ரூபாய் வரி பணத்தை அரசுக்கு செலுத்தாமல் மறைத்ததை கண்டுபிடித்துள்ள அதிகாரிகள், இது தொடர்பாக வருமான வரி அலுவலகத்தில் வரும் வெள்ளிக் கிழமை ஆஜராகி நடிகர் விஷால் விளக்கமளிக்கவும் சம்மன் அனுப்பினர். இது குறித்து சென்னையில் பதிலளித்துள்ள நடிகர் விஷால், இணையத்தில் படம் பார்த்ததாக கூறியதால் தான் கேள்வி கேட்டேன், இதற்காக பழிவாங்கப்பட்டால் அதை எதிர்கொள்ள தயராக இருப்பதாவும் முறையாக வரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.