தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையால், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர் மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை ஆகிய மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 30-ம் தேதி முதல் வெளுத்து வாங்கிய கனமழையால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதுடன், பெரும்பாலான சாலைகளும் குளம்போல் காட்சியளிக்கின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், கோயம்பேடு, பாடி, அம்பத்தூர், ஆவடி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

வட சென்னையில் பேசின் பிரிட்ஜ் சந்திப்பு சாலை, புரசைவாக்கத்தில் இருந்து வியாசர்பாடி செல்லும் அம்பேத்கர் கல்லூரி சாலை, அண்ணா நகர் மேற்கில் உள்ள பள்ளிச்சாலை, அண்ணா நகர் மேற்கில் உள்ள 21வது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கியது. இதேபோல், சென்னை ஓட்டேரியில் கனமழை காரணமாக பிரிக்லின் சாலை பக்கிங்ஹாம் கால்வாய் அருகே இடுப்பளவுக்கு மழை நீர் தேங்கியது.

இந்நிலையில், தொடர் மழையின் எதிரொலியாக நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூரை தவிர்த்து பிற அனைத்து தாலுகாக்களிலும் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *