தெற்காசியாவை தீவிரவாதம், வன்முறையற்ற பிரதேசமாக மாற்ற பாகிஸ்தான் புதிய அரசு உறுதியேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பெரும்பான்மை பலம் இல்லாததால், உதிரிக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் இம்ரான்கான் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், பாகிஸ்தான் மக்கள் தேர்தலில் வாக்களித்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார்.
புதிய பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் அமைதி முயற்சியைத் தொடர விரும்புவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ராணுவமும், புதிய அரசும் தீவிரவாதத்தை குறித்து எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை என்ற போதும், தெற்காசியாவை பயங்கரவாதம் மற்றும் வன்முறையற்ற பிரதேசமாக்க ஆக்கப்பூர்வமான வழிகளில் செயல்பட வேண்டும் என ரவீஷ் குமார் வலியுறுத்தினார். அமைதி முயற்சியில் இந்தியா ஓரடி எடுத்து வைத்தால், தாம் இரண்டு அடி முன்வைக்கத் தயாராக இருப்பதாக இம்ரான் கான் கூறியிருப்பதற்கு செய்தித் தொடர்பாளர் வரவேற்புத் தெரிவித்தார்.