தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து அறிவதற்காக மருத்துவமனையில் ஏராளமானோர் விடிய விடியத் திரண்டிருந்தனர்.
கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவல் அறிந்து கடந்த வியாழக்கிழமை துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கோபாலபுரம் வந்திருந்தனர். இந்த தகவலை அறிந்து தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி வீட்டின் முன்பு குவியத் தொடங்கினர். கடந்த 3 நாட்களாக அவர்கள் கருணாநிதியைப் பார்க்கத் துடித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துச் செல்லப்பட்டபோது அப்பகுதி முழுவதும் தொண்டர்கள் மயமாகக் காட்சி அளித்தது. கருணாநிதியை வாழ்த்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் இரவுபகலாகக் காத்திருக்கின்றனர். போலீசார் அவர்களைக் கலைந்து செல்ல பலமுறை அறிவுறுத்தியபோதும் கவலை தோய்ந்த முகத்தோடு அங்கேயே உள்ளனர். குடியரசுத் துணைத் தலைவர் இன்று வருகை தர இருப்பதால் பாதுகாப்பு கருதி பேரிகார்டு கொண்டுவரப்பட்டபோது தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரும்ப எடுத்துச் செல்லுமாறு கோஷமிட்டனர்.
விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள், கருணாநிதி உடல்நலம் பெற்று எழுந்துவரவேண்டும் என முழக்கங்களை எழுப்பியவண்ணம் இருந்தனர்.