திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் திவாகரன் இன்று ஆஜராக உத்தரவு ; சோதனைகளால் தங்களை பணியவைக்க முடியாது என்று திவாகரன் அதிரடி பேட்டி….

திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜராக வீ.கே.சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வி.கே. சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. அனைத்து சோதனைகளும் முடிவடைந்த நிலையில், அப்போது சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இளவரசியின் 2 மகள்கள் கிருஷ்ணபிரியா, சகீலா மற்றும் ஜெயா டி.வி.யின் மேலாளர் நடராஜன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை முன்பாக ஆஜராகி விளக்கமளித்தனர். இதனிடையே திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆஜராக திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், எந்த சோதனையாலும் தங்களை பணியவைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *