திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதில், எந்த உள்நோக்கமும் இல்லை என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சட்டசபை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி, தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, எம்.எல்.ஏ. செம்மலை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் தங்களது கருத்தை கேட்காமல், எந்த முடிவும் எடுக்கக்கூடாது என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. உறுப்பினர்களுக்குப் பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பேரவைச் செயலாளர் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்தது ஏன் என்பதற்கு விளக்கம் கேட்டுதான் திமுக உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அதில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்காமல் இருக்க நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *