டெங்குவை அரசு நிச்சயம் ஒழிக்கும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி நகராட்சியாக உருவாக்கப்படும் என உறுதியளித்தார். தற்போதைய ஆட்சியில் அரசு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக முதலமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழி நடத்தப்படும் அரசு பொதுமக்கள் ஒத்துழைப்போடு டெங்கு கொசுவை ஒழித்தே தீரும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவான ஆட்சி நிலைக்காது என சிலர் நினைத்தது நடக்காது என்றார். கடலும் வற்றாது, கருவாடும் தின்ன முடியாது என அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.