திமுகவை வலிமை இழக்க செய்யவேண்டும் என்ற முனைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் அவதூறுகளை பரப்பி வருவதாக எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அதனை பொறுக்க இயலாத ராமதாஸ் கடலூரில் நிகழ்ந்த தனிநபர் விவகாரங்களில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டு இருப்பதாக அபாண்டமாக அவதூறுகளை பரப்பி வருவதாக தெரிவித்தார். திமுக வுக்கு ஆதரவு அளித்த இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என ராமதாஸ் தெரிவித்து இருப்பது திமுகவை வலிமை இழக்க செய்யவேண்டும் என்ற நோக்கமாகும் என்றும் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சிதமிழர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியின் மக்களுக்கு உதவி வழங்கும் திட்டங்களை தடுத்து நிறுத்தி தலித்மக்களுக்கு பிரதமர் மோடி அநீதி இழைத்து உள்ளார் என்று குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் அமைக்க இதுவரை தமிழக அரசு முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மாட்டிறைச்சிக்கு விற்பனைக்கு எதிரான திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்று இருப்பதன் மூலம் மக்களின் எதிர்ப்பை மத்திய அரசால் எதிர் கொள்ளமுடியவில்லை என்பது நிரூபணமாகி இருப்பதாக எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.