மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை கண்டித்து வரும் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் திரைப்பட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை தனிப்பட்ட முறையிலும், காழ்ப்புணர்ச்சி வெளிப்படுத்தும் விதமாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அவரது செயலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் மற்றும் மயிலாடுதுறையில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பாஜகவின் தொண்டர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். ஆதிக்க சக்திகளை கண்டித்து வரும் 3-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தோழமை கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடூரமாக தாக்கப்பட்ட கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாம் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.