உலகளாவிய அச்சுறுத்தலான தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா – இத்தாலி இருநாடுகளும் இணைந்து போராடும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லி வருகை தந்த இத்தாலிய பிரதமர் பாலோ ஜென்டிலோனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட இத்தாலி பிரதமர் பாலோ, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, தலைவர்கள் இருவரும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பை அடுத்து, இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையே, எரிசக்தி, பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய கலாசாரத்தை இத்தாலி மக்கள் போற்றுவதாக கூறினார். இணையதள குற்றம் தவிர்ப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்பில் இருதரப்பினரும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியா – இத்தாலி இடையேயான 70 ஆண்டு கால உறவை எடுத்துரைக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.