தமிழகத்தில் 300 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் ; நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

தமிழகத்தில் 300 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், 34 ஆயிரத்து 655 பேருக்கு 87.74 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் 300 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துதல், புதிய மேம்பாலங்கள், பேருந்து வசதி, தடுப்பணைகள், சாலை விரிவாக்கம் என பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆட்சியை கலைக்க நினைக்கும் மு.க ஸ்டாலின் கனவு கானல் நீராக தான் போகும் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் குறை கூறுவதை நிறுத்திவிட்டு களப்பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முன்னதாக விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய ஆட்சி தொடரக்கூடாது என பலரும் திட்டம்போட்டு வருகிறார்கள் என்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழக மக்கள் ராமச்சந்திர ஜெயந்தியாக கொண்டாடி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *