பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஆசியான் அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் ஆசியான் அமைப்பு நாடுகளுடன் நட்புறவு கொண்டுள்ள இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுக்குக்குச் பிரதமர் மோடி நேற்று சென்றடைந்தார். அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து நாட்டுத் தலைவர்களும் ஒரே மாதிரியான உடையணிந்திருந்தனர். பின்னர், பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்டேவும், அவரது மனைவியும், அனைத்து நாட்டுத் தலைவர்களையும் வரவேற்று குடும்பப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து இன்று நடைபெறவுள்ள மாநாட்டில், வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை வலுப்படுத்துவது தொடர்பாக ஆசியான் மாநாட்டில் விவாதிக்கப்படுவதுடன், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைத் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை மோடி சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.