சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கில் நகர்ந்து மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும், அதிகபட்சமாக சீர்காழியில் 31 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் கூறிய அவர், 21 இடங்களில் கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்ற அவர், வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார். இந்த மழை நிலவரம் இன்னும் இரண்டு, மூன்று தினங்களுக்கு தொடரும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்வது தொடர்பாக எந்த எச்சரிக்கையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2017-11-01