தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று பதவி ஏற்கவுள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், பன்வாரிலாலுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் நேற்று சென்னை வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து, விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆளுநர் மாளிகையில், இன்று காலை 9.30 மணியளவில் நடைபெறும் விழாவில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்கவுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.