தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே அமைந்துள்ள கருப்பாநதி அணை நிரம்பி முழு கொள்ளளவான 72 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 50 கன அடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அடுத்தடுத்து உள்ள கண்மாய்களுக்கு திருப்பப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கடனாநதி அணை, 83 அடியை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ராமநதி அணை முழு கொள்ள ளவான 84அடியை எட்டியதை அடுத்து அணை திறந்து விடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. இதனால் சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவான 97அடியை நீர் எட்டியது. இதனை அடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை நிரம்பி வழிவதால் அணையில் இருந்து 9 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.