தனியார் மருத்துவமனை கட்டடப்பணியின் போது விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சென்னையில் தனியார் மருத்துவமனை கட்டடப் பணியின்போது, சாரம் சரிந்து விழுந்த விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விடிய விடிய நடைபெற்று மீட்பு பணிகளின் போது, 29 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தரமணி அடுத்துள்ள கந்தன்சாவடி பகுதில் செயல்பட்டு வரும் ஜெம் மருத்துவமனையின் பின்பகுதியில் ஜெனரேட்டர் வைப்பதற்காக இரும்புராடுகள் மூலம் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில், பீகார், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த  தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 இந்நிலையில் நேற்று மாலை இரவு ஏழரை மணியளவில், கட்டுமானத்துக்காக கட்டப்பட்டிருந்த சாரம் திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் அங்கு பணியிலிருந்த தொழிலாளர்கள் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அப்பகுதியில் இருந்தவர்கள் சிலரை உடனடியாக மீட்டதோடு காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சிலரை மீ்ட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து இரவு 10 மணியளவில் வந்த தேசிய பேரிடர் மீ்ட்புக் குழுவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளிலிருந்து மொத்தம் 29 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பீகாரைச் சேர்ந்த 18 வயதான பப்லு என தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *