தனியார் நிறுவனங்களின் தேவைக்காகவே ஆட்சியும் அதிகாரமும் செயல்படுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரை அடுத்த நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வந்தனர். சாலை விரிவாக்கத்திற்காக இப்பகுதியில் உள்ள சுமார் 500 வீடுகளை பொதுப்பணித்துறையினர் இடித்தனர். இதையடுத்து தி்ருவொற்றியூர் வடியுடையம்மன் கோவில் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடம் கடல் நீர் சூழ்ந்து் காணபடுவதாலும் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாகவும் இருப்பதாலும் அங்கு வசிக்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் , ஓடைக்குப்பம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு, மீனவ மக்களை தொடர்ந்து வஞ்சித்துவருவதாகவும், சாலை விரிவாக்கம் செய்த பின்னரும் அப்பகுதி குடிசைகளை அகற்றியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தனியார் நிறுவனங்களின் தேவைக்காகவே ஆட்சியும் அதிகாரமும் செயல்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.