டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் சாலைகள் தெரியாத நிலையில் வாகனங்களை இயக்கியதால் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்துகளில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனியுடன் காற்றுமாசும் சேர்ந்து, அடர்த்தியான பனிப்புகை சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், முன்னே செல்லும் வாகனங்களும், எதிரே வரும் வாகனங்களும் தெரியாமல் பலர் விபத்துகளில் சிக்குகின்றனர். சாலையை மறைக்கும் பனிப்புகையால், பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பாலம் ஒன்றில் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக சிலர் அங்கு கூடியபோது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று கூட்டத்தில் நுழைந்ததில், 9 பேர் உயிரிழந்தனர். அதேபோல், டெல்லி – ஆக்ரா விரைவுச் சாலையில் பனிப்புகையால், பேருந்துகள், கார்கள், லாரிகள் என அவ்வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும், ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின. விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து இறங்கியவர்கள், பின்னால் வரும் வாகனங்களை எச்சரித்தாலும், விபத்துகளை தடுக்க முடியாததால் பலர் காயமடைந்தனர். இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில், 3 இடங்களில் நடந்த விபத்துகளில் 3 பேர் பலியானதுடன், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.