டெல்லியில் இன்று நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 16ம் தேதி வரை குளிர்காலக் கூட்டத் தொடர் 22 அமர்வுகளாக நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு, இன்று தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடர் ஜனவரி 5ம் தேதியுடன் 14 நாட்களில் முடிவடைகிறது. குஜராத் தேர்தல் சமயத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுப்பப்படக் கூடும் என்பதாலேயே கூட்டத் தொடரை தாமதமாகத் தொடங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் கூட்டத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், குளிர்காலக் கூட்டத் தொடர் அமைதியாகவும், பயனுள்ளதாகவும் நடைபெற ஒத்துழைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஜிஎஸ்டியில் மாநிலங்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இந்த தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.