சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி தினேஷ் சவுத்ரியை ராஜஸ்தானில் அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் கடந்த மாதம் 16ம் தேதி தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் சிலர் ராஜஸ்தானுக்கு தப்பியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை தனிப்படையினர் பிடிக்க முற்பட்ட போது கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் ராஜஸ்தானில் ஏற்கனவே கொள்ளை வழக்கு ஒன்றில் கைதான தினேஷ் சவுத்ரிக்கு கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதை அம்மாநில காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஜோத்பூர் பகுதியில் தினேஷ் சவுத்ரியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான நாதுராமை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தான் சென்றுள்ள சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ்குமார் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.